மத்திய பிரதேச அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் தனது மனைவியின் உடலை வீட்டிற்குள்ளேயே புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஓம்கார் தாஸ் மோக்ரேவின் (50), மனைவி ருக்மணி (45) செவ்வாய்கிழமையன்று உயிரணு பாதிப்பு நோயால் மரணமடைந்தார். அதன்பின்னர் மனைவியின் உடலை மோக்ரே தனது வீட்டின் தாழ்வாரத்திலேயே அடக்கம் செய்தார்.
மோக்ரேவின் இந்த செயலுக்கு அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும், மோக்ரே தனது மனைவியை நேசிப்பதால் பிரிய மனமில்லாமல் வீட்டிலேயே புதைப்பதாக அவர்களிடம் கூறினார். திண்டோரி மாவட்டத்தில் உள்ள பனிகா சமூகத்தில் வீட்டின் வளாகங்களிலேயே குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் புதைக்கப்படுவது பாரம்பரிய வழக்கம் என்றும் அவர் உள்ளூர் மக்களிடம் கூறினார். ஆனால், இதுகுறித்து திண்டோரி தாசில்தார் கோவிந்திரம் சலாமேவுக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதன் பின்னர் தாசில்தார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில், வீட்டில் புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு வேறு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.