கூலித்தொழிலாளி தற்கொலையில் அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், மலையடிபுதூர் பருத்திவிளைத் தெருவைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் அய்யப்பன்(35) இவர் சில தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள சுடலைக் கோயிலில் உள்ள சாமி சிலையைச் சேதப்படுத்தினார். இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் அய்யப்பனைக் கைது செய்யக்கோரி சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அய்யப்பன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினம் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு அவரது மனைவி ஈஸ்வரி, சீனித்துரை என்பவர் தான் காரணம் என்றும், அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று அய்யப்பனின் தந்தை ராமையா திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியானது.
அய்யப்பனுக்கும், ஈஸ்வரி(29) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகளும், இரு மகன்களும் உள்ளனர். ஈஸ்வரி, அதே ஊரைச் சேர்ந்த விவசாயி சீனித்துரை என்பவரது தோட்டத்தில் வேலைக்குச் சென்று வந்தார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இது ஒருகட்டத்தில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது.
இந்நிலையில் தொழிலாளி அய்யப்பன் தன் வீட்டுக்கு வந்தபோது, ஈஸ்வரியும், சீனித்துரையும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்துள்ளார். இதனால் மனஉளைச்சல் அடைந்தவர் தன் வீட்டில் இருந்த துணிகளுக்கு தீவைத்துவிட்டு, தொடர்ந்து உள்ளூர் சுடலைக்கோயிலிலும் போய் சாமி சிலையைச் சேதப்படுத்தியுள்ளார். இதன் பின் அய்யப்பன் வீட்டுக்கு வந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அய்யப்பனின் மனைவி ஈஸ்வரியை போலீஸார் இன்று கைது செய்தனர். சீனித்துரையைத் தேடி வருகின்றனர். இந்த கைது சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.