
திருவெறும்பூர் அருகே மாமியாரிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் மீது மனைவியும் மாமியாரும் சேர்ந்து சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து ஊற்றியதில் பலத்த காயமடைந்த கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவெரும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் செல்வராஜ். இவர் தனது மனைவி டயானாமேரி மற்றும் மனைவியின் தாய் இன்னாசியம்மாள் ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக செல்வராஜுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. செல்வராஜ் குடித்துவிட்டு வந்து அடிக்கடி மாமியாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைக் கண்டித்தாலும் செல்வராஜ் திருந்தாமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்த செல்வராஜ் மாமியாருக்கு பாலியல் தொல்லை தந்திருக்கிறார்.
இதனால் மனம் வெறுத்துப்போன செல்வராஜின் மனைவி டயானா மேரியும், இன்னாசி அம்மாளும் செல்வராஜ் மீது சுடு தண்ணீரில் மிளகாய்ப் பொடியை கலந்து ஊற்றியுள்ளனர். இதில் செல்வராஜ் உடல் முழுவதும் வெந்து போன நிலையில் துடி துடித்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்வராஜை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஏற்கெனவே திருவெறும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து செல்வராஜின் மனைவி, மாமியார் இருவரையும் விசாரித்து வந்த நிலையில், செல்வராஜ் சிகிச்சை பலனின்றி இறந்ததால் இந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றி டயானாவையும், இன்னாசி அம்மாளையும் கைது செய்துள்ளனர்.
கணவனை மனைவியும், மாமியாரும் சேர்ந்து வெந்நீரை ஊற்றி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.