`எங்கள் தெருவில் உனக்கு என்ன வேலை என்று கேட்டதால் கொன்றேன்'- வாலிபர் அதிர்ச்சி வாக்குமூலம்

 கொலை
கொலை எங்கள் தெருவுக்கு ஏன் வந்தாய்? போதையில் தாக்கியவர் கொலை
Updated on
1 min read

மதுபோதையில் வாலிபரிடம் எங்கள் தெருவுக்கு ஏன் வந்தாய் எனத் தடுத்து நிறுத்தி கேள்விகேட்டு, சண்டை செய்த கட்டுமானத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் மூவேந்தர்நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜா (58) கட்டுமானத் தொழிலாளி. இவர் குடித்துவிட்டு போதையில் மூவேந்தர்நகர் பகுதியில் நேற்று இரவு வந்துகொண்டு இருந்தார். அப்போது ஜெனித்(24) என்ற வாலிபர் அந்த வழியாக வந்தார். அப்போது, ஏன் இங்கு வந்தாய் என கிறிஸ்துராஜா கேள்வி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது கைகலப்பாகவும் மாறியது. இருவரும் பரஸ்பரம் கம்பியால் தாக்கிக் கொண்டனர். இதில் ஜெனித் தாக்கியதில் கிறிஸ்துராஜா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இதுகுறித்து போலீஸாருக்கு ஜெனித் அளித்த வாக்குமூலத்தில், “நான் வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்து வருகிறேன். என் வீடும் இப்போது மூவேந்தர்நகர் பகுதியில் தான் உள்ளது. இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும்போது எங்கள் தெருவில் உனக்கு என்ன வேலை என என்னிடம் முதலில் கிறிஸ்துராஜா தகராறு செய்தார். ஒருகட்டத்தில் இரும்புக் கம்பியால் தாக்கினார். நான் அதை பறித்து திருப்பித் தாக்கினேன். இதில் அவர் இறந்துவிட்டார்” என்றார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெனித் மீது ஏற்கெனவே கோட்டாறு காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in