மாணவி பிரியா மரணத்துக்கு என்ன காரணம்?- சுகாதாரத்துறையிடம் அறிக்கை கேட்கும் காவல்துறை

மாணவி பிரியா மரணத்துக்கு என்ன காரணம்?- சுகாதாரத்துறையிடம் அறிக்கை கேட்கும் காவல்துறை

மாணவி பிரியா மரணம் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி சுகாதார துறைக்கு சென்னை காவல்துறை கடிதம் அணுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடி எம்.எம் கார்டன் பகுதியைச் சேரந்த கூலி தொழிலாளி ரவி என்பவரின் மகள் பிரியா (17). இவர் ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததுடன் கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் இருந்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற பிரியாவுக்கு மீண்டும் காலில் வலி ஏற்பட்டதால் கடந்த மாதம் 28-ம் தேதி பிரியா பெரியார்நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரியாவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பின்னர் பிரியாவின் உடல் நிலை மோசமடைந்ததால் கடந்த 8-ம் தேதி மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரியா அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரியாவுக்கு காலில் ரத்தம் ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டதால் அவரது முழங்கால் பகுதி வரை அகற்றப்பட்டது. இந்நிலையில் இன்று காலை மாணவி பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக குடும்பத்தாரிடம் புகாரைப் பெற்று பெரவள்ளூர் போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது பிரியா மரணம் தொடர்பாக அலட்சியமான மருத்துவப் போக்கினாலும், தவறான சிகிச்சையினாலும் உயிரிழந்துள்ளாரா என விளக்கமளித்து அறிக்கை அளிக்கும் படி மக்கள் நலவாழ்வுத்துறைக்கு சென்னை காவல்துறை சார்பில் கடிதம் அணுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலவாழ்வுத்துறை அளிக்கும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையிலேயே சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in