விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கலாம்: சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி

விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கலாம்: சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் காவல் ஆணயர்கள் ராஜேந்திரன், ஜார் உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் அருகே தனியாருக்கு சொந்தமான குடோனில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரகசிய டைரி ஒன்றும் கைபற்றப்பட்டது. அந்த டைரியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதற்காக உயர் அதிகாரிகள் பலருக்கு லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ், எஸ்.பி விமலா மற்றும் காவல்துறை அதிகாரிகள், கலால்துறை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையாக வைத்து அவர்களை நேரில் அழைத்து விசாரணையும் நடத்தினர். அதன் பின்னர் குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேரை சிபிஐ கைது செய்தது.

மேலும் இந்த வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக சம்பாதித்த 639 கோடி ரூபாயை பல மாநிலங்களில் அசையும், அசையா சொத்துகள் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சொந்தமான 246 கோடி சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கி நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 12 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் வழக்குபதிவு செய்ய அனுமதி கேட்டு சிபிஐ, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. குறிப்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் உயர் பொறுப்பு வகித்தவர்கள் என்பதால் தமிழக அரசின் அனுமதி பெற்ற பின்னர் தான் வழக்குபதிவு செய்ய முடியும் என்ற நடைமுறை உள்ளது. அதன் அடிப்படையில் சிபிஐ தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.

இந்நிலையில் குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ், உதவி ஆணையர் மன்னர்மண்ணன், ஆய்வாளர் சம்பத், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி பழனி உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி கடிதம் அனுப்பியது. தமிழக அரசு அனுமதியளித்ததை அடுத்து குட்கா வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in