கீழக்கரை நகரை அனுமதியின்றி வீடியோ எடுத்த ஆந்திர வாலிபர்களிடம் போலீஸார் விசாரித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் வாடகை கார் ஒன்றில் பொருத்திய கேமரா நகரின் பல்வேறு இடங்களில் நிறுத்தி வீடியோ எடுத்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்தி பொதுமக்கள் விசாரித்தபோது அதிலிருந்த இருவர் தெலுங்கில் பதில் அளித்தனர். தமிழில் பேசிய டிரைவர் வாடகைக்கு கார் பேசி எடுத்து வந்ததாக கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் இது குறித்து கீழக்கரை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் காரில் இருந்தவர்களிடம் விசாரித்தார். விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த ஜீவன் எனவும், யூடியூப் சேனல் நடத்தி வருவதாகவும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு சென்று சாலை, ஊர்களின் அமைவிடம் தொடர்பாக படம் எடுத்ததாக கூறினார்.
ராமநாதபுரத்தில் இருந்து வாடகை கார் எடுத்து வந்ததும் தெரிவித்தார். வீடியோ எடுப்பதற்கான அனுமதி கடிதம் இல்லை என தெரிந்தது. இதையடுத்து காரில் பொருத்திய கேமரா அகற்றப்பட்டது.
பொதுமக்கள் கூறுகையில், கடந்த 2 நாட்களாக கீழக்கரையை சுற்றி வந்த காரை போலீசேர் கண்காணிக்காதது வருத்தமளிக்கிறது என்றனர்.