சீனாவில் நேற்று 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது சமீபத்திய ஆண்டுகளில் சிச்சுவான் மாகாணத்தைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாகும். இந்த நில நடுக்கத்தில் சிக்கி 65 பேர் உயிரிழந்தனர். இதனால் 50,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிச்சுவான் மாகாண அரசின் மீட்புப் படையினர் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கவும், அவசரகால நிவாரணங்களை வழங்கவும் விரைவாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது ட்விட்டரில் நிலநடுக்கத்தின் தாக்கத்தை காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ கிளிப்பில் கட்டிடங்கள் இடிந்து விழுவதையும், கோபுரங்கள் ஆடுவதையும், மரங்கள் சரிவதையும் காட்சிகள் காட்டுகின்றன.
நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட போது சாலையில் சென்ற காரில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான இந்த வீடியோ காட்சிகள் இப்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 250 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷான்சி மற்றும் குய்சோ மாகாணங்கள் வரை உணரப்பட்டது.
சிச்சுவானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. 2017ல் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. சிச்சுவானில் மற்றும் சீனாவில் 2008 ம் ஆண்டில் வென்சுவானை மையமாகக் கொண்டு ஏற்பட்ட 8.0 ரிக்டர் நிலநடுக்கத்தால் 70,000 பேர் உயிரிழந்தனர்.