வேறு ஒருவரைக் காதலிப்பதாக சந்தேகம்… பஸ்சுக்குக் காத்திருந்த மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து: காதலன் கைது

வேறு ஒருவரைக் காதலிப்பதாக சந்தேகம்… பஸ்சுக்குக் காத்திருந்த மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து: காதலன் கைது

மூன்று வருடமாக காதலித்து வந்த காதலியை, சரமாரியாகக் கத்தியால் குத்திய மாணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த குப்பாத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(20). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி யாஷினியும் மூன்று வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். மேலும் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் யாஷினி, வேறொருவரைக் காதலிப்பதாக சதீஷ்குமாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக அவர், சதீஷ்குமாரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் இன்று காலையில் கல்லூரிக்குச் செல்ல திருவலம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த யாஷினியைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது யாஷினிக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யாஷினியின் முகத்திலும், கழுத்திலும் சரமாரியாகக் குத்திவிட்டு சதீஷ்குமார் தப்பிச் சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தின் துடித்த யாஷினிக்கு அங்கிருந்தவர்கள் முதலுதவி செய்தனர். தகவல் அறிந்து வந்த திருவலம் காவல் நிலைய போலீஸார் மாணவியை மீட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து திருவலம் காவல் நிலைய காவலர்கள் தப்பியோடிய சதீஷ்குமாரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in