காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வீரட்டீசுவரர் கோயிலில் முறையாக அனுமதிபெறாமல், விதிகளை மீறி புனரமைப்பு பணிகள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள கீழ் படப்பையில் உள்ள வீரட்டீசுவரர் சுவாமி கோயிலில் அனுமதி பெறாத திருப்பணிகள் நடைபெறுவதுடன், கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இக்கோயிலில் உள்ள தொன்மையான கல்வெட்டுக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ராஜகோபுர திருப்பணிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் பல ஆண்டுகளாக பணிகள் நடைபெறுவதாகவும், பதிவேடுகள் முறையாக பேணப்படாத நிலையில் தனி நபர்களுக்கு மின் இணைப்பு வழங்க கோயிலின் செயல் அலுவலரால் சட்டவிரோதமாக ஆட்சேபனையின்மை சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை, நிர்வாகம் ஆகிவற்றிற்கு ஜூலை 1-ம் தேதி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.