செங்கோட்டை - பெங்களூரு இடையே தினசரி ரயில் இயக்குக: வைகோ கோரிக்கை
செங்கோட்டையிலிருந்து பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்னக ரயில்வேயின் வளர்ச்சி ஆய்வுக்குழு கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொது மேலாளர் ஆர் எம் சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எம்.பி.க்கள் வெங்கடேசன், மாணிக்தாகூர், ரவிந்திரநாத் குமார், கார்த்தி சிதம்பரம், திருநாவுக்கரசர், வேலுச்சாமி, சண்முகசுந்தரம், தனுஷ் குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய ரயில்வே வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசினர்.
இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி கலந்து கொண்டு பேசியதாவது: "திருச்சி மற்றும் மதுரை கோட்டங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு திருவனந்தபுரம் ரயில்வே வாரியம் தேர்வு நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனை திரும்பப்பெற வேண்டும். நெல்லை - சென்னை எழும்பூர் இரட்டை ரயில் பாதை பணி முடிந்து விட்டது. எனவே கோவில்பட்டி, மற்றும் திண்டுக்கல் இடையே முக்கியமான வர்த்தக நகரங்களை இணைக்கும் வகையில் நான்கு ஜோடி டெமோ ரயில்களை இயக்க வேண்டும்.
மூடப்பட்டுள்ள கரிவலம் வந்தநல்லூர், சோழபுரம் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களையும் மீண்டும் திறக்க வேண்டும். செங்கோட்டையில் இருந்து பெங்களூருக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும், சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சிவகாசியில் நிறுத்தம் கொண்டு வர வேண்டும். பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இரு மார்க்கங்களிலும் திருமங்கலத்தில் நிறுத்தம் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் பேசினார்.