
அமெரிக்காவின் வருடாந்திர உளவு ஆய்வறிக்கை, ‘பாகிஸ்தான் மற்றும் சீனாவால், இந்தியாவுக்கு விரைவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும்’ என்று கணித்திருக்கிறது.
2020, கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் தொடங்கி சீனா - இந்தியா இடையிலான எல்லை உறவு மோசமடைந்து வருகிறது. மேலும் அருணாச்சல பிரதேசத்தின் எல்லை கிராமங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு விவகாரம் அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறது. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் தேசத்தின் ஸ்திரமின்மை காரணமாக அங்கே பயங்கவாத குழுக்களின் கை ஓங்கி வருகிறது. அவை பாகிஸ்தானின் அமைதியை குலைத்து வருவதோடு, காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து இந்தியாவிலும் ஊடுருவ தயாராகி வருகிறார்கள்.
இந்த இரு எல்லை விவகாரங்களையும் முன்வைத்து, 2023ல் இந்தியாவின் பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தல் எழுந்திருப்பதாக, அமெரிக்க உளவு ஆய்வறிக்கை கவலை எழுப்பியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான உறுதியான நடவடிக்கைகளும், எல்லை நாடுகளை சீண்டி வருவதாகவும், இதனாலும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை அலசுகிறது. இவை தவிர்த்து உக்ரைன் - ரஷ்யா போர், அண்டை தேசங்களுடனான சீனாவின் அத்துமீறல்கள் ஆகியவை நடப்பாண்டின் உலக அமைதிக்கு ஊறு விளைவிப்பது குறித்தும் பல்வேறு தரவுகளுடன் அமெரிக்க உளவு ஆய்வறிக்கை கவனம் ஈர்த்துள்ளது.