திருச்சி விமான நிலையத்தில் துபாய் செல்லும் தமிழக பயணியிடம் இருந்து ரூபாய்.39.30 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு புறப்படத் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த அபூபக்கர்( 38) என்ற பயணியின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது அவர் மறைத்து வைத்து வெளிநாட்டிற்கு கடத்த இருந்த 39.30 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களைக் கண்டுபிடித்த தொழில் பாதுகாப்பு படையினர் அதனைப் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர். அதனைப் பெற்றுக்கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணியிடமிருந்து அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.