'ஊர் கட்டுப்பாடு இனி தின்பண்டம் தரமுடியாது'; பள்ளிக்குழந்தைகளிடம் தீண்டாமைக் கொடுமை: வைரலாகும் வீடியோ

கடையில் பொருள் வாங்க வந்த குழந்தைகள்
கடையில் பொருள் வாங்க வந்த குழந்தைகள்

தென்காசி மாவட்டத்தில் ஊர் கட்டுப்பாடு எனச் சொல்லி பட்டியல் சமூகக் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்காமல் திருப்பி அனுப்பும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாங்குளம் கிராமம். பெரும்புத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட இங்கு அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வரும் வழியில் மிட்டாய் கடை ஒன்று உள்ளது. அங்கு குழந்தைகள் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே பள்ளிக்குச் செல்வது வழக்கம். நேற்றும் வழக்கம் போல் கடைக்குச் சென்றனர்.

அப்போது கடைக்காரர் குழந்தைகளிடம், “இனிமேல் நீங்கள் யாரும் இங்குவந்து தின்பண்டம் எதுவும் வாங்க வேண்டாம். ஸ்கூலுக்குப் போங்க. தின்பண்டம் உள்ளுர் கடையில் வாங்கக்கூடாது. நீங்கள் போங்க ”எனக் குழந்தைகளிடம் சொல்கிறார். கூடவே, “ இதை உங்கள் வீட்டிலும் போய் சொல்லுங்கள். தின்பண்டம் கொடுக்க மாட்டுறாங்க எனச் சொல்லுங்க. இனி கொடுக்க மாட்டாங்கடா. ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு”எனச் சொல்கிறார் கடைக்காரர்.

உடனே, கட்ட்டுப்பாடா? என அந்தக் குழந்தைகள் ஆச்சரியத்தோடு, என்னக் கட்டுப்பாடு என்கிறார்கள். உடனே, ‘கட்டுப்பாடுன்னா..ஊர்ல ஒரு கூட்டம் போட்டு பேசிருக்கு. யாருக்கும் உங்கத் தெருவுல பொருள்கள் கொடுக்கக் கூடாதுன்னு” எனக் கூலாகச் சொல்லி குழந்தைகளைத் திருப்பி அனுப்புகிறார். இதை அந்தக் கடைக்காரரே வீடியோவும் எடுத்துள்ளார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த அந்த குழந்தைகள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஏக்கத்துடன் செல்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடைக்காரர் தன் சுய சாதியினர் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் இந்த வீடியோவை சுய பெருமைக்காக பகிர்ந்துள்ளார். அது அங்கிருந்தே வாட்ஸ் அப் குழுக்களின் மூலம் வைரலானது. இந்த சம்பவம் குறித்து தென்காசி மாவட்ட நிர்வாகமும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in