
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் மத்திய வெளியுறவு மற்றும் இந்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி ஓட்டம் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் பிரிஜ் பூஷனும், சில பயிற்சியாளர்களும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்தனர். ஆனால், அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படாததால் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, புதிய நாடாளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீராங்கனைகள் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே, மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் மத்திய வெளியுறவு மற்றும் இந்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி ஓட்டம் பிடித்தார். அவரின் பின்னால் நிருபர்கள் ஓடினர். ஆனால், அமைச்சர் எந்த பதிலும் அளிக்காமல் காரில் ஏறிச்சென்றுவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி பெண்கள் மல்யுத்த வீரர்களின் பிரச்சினையில் கடுமையான எதிர்வினைகளை வழங்கினார் என்றும் இதனை நீங்களே பாருங்கள் என்றும் கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டுள்ளது.