நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டால் சர்ச்சை... மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எதிர்வினை!

நேபாளம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய ரூபாய் நோட்டு
நேபாளம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய ரூபாய் நோட்டு

நேபாளம் வெளியிட்டுள்ள புதிய 100 ரூபாய் நோட்டுக்களில் சர்ச்சைக்குரிய பகுதிகள் இருப்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகியவற்றை இந்தியா தனது பகுதியாக பராமரித்து வருகிறது. இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்கம், பிஹார், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுடன் சுமார் 1850 கி.மீ. பரப்பளவு எல்லைப் பகுதியை நேபாளம் பகிர்ந்து கொள்கிறது. இந்த நிலையில் நேபாளம் வெளியிட்டுள்ள புதிய 100 ரூபாய் நோட்டுக்களில் சர்ச்சைக்குரிய வகையில் லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய பகுதிகளுடன் வரைபடம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரேகா சர்மா
ரேகா சர்மா

இது குறித்து நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவு குறித்து நேபாள அரசின் தகவல் தொடர்பு அமைச்சரும், செய்தித் தொடர்பாளருமான ரேகா சர்மா கூறுகையில், "பிரதமர் புஷ்பகமல் தஹால் பிரசந்தா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை நாட்டின் புதிய 100 நோட்டில் அச்சிட முடிவெடுக்கப்பட்டது.

ஏப்ரல் 25 மற்றும் மே 2-ம் தேதிகளில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டின் மறு வடிவமைப்பு மற்றும் அதன் பின்னணியில் அச்சிடப்பட்ட பழைய வரைபடத்தை மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2020, ஜூன் 18-ம் தேதி நேபாளம் அதன் அரசியல் அமைப்பை திருத்துவதன் மூலம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய நாட்டின் அரசியல் வரைபடத்தைப் புதுப்பிக்கும் பணியை நிறைவு செய்தது. இதற்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியது. நேபாளத்தின் பிராந்திய எல்லையை நீட்ட கோரும் செயற்கை விரிவாக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறும்போது, " இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது. நேபாளத்துடன் எல்லைகள் குறித்த விவாகாரத்தில் இந்தியா விவாதித்து விரிவான தளத்தில் விவாதித்து வருகிறது. இந்த நேரத்தில் நேபாளத்தின் தரப்பில் இருந்து தன்னிச்சையாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தரப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கள யதார்த்தத்தில் எந்த மாற்றமும் நிகழந்து விடாது" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in