மகன் கொலையானதை அறியாதிருந்த தாய்... சடலம் வீட்டை எட்டியதும் உயிர்விட்ட சோகம்!

குர்விந்தர் நாத் - கனடா மருத்துவமனையில்...
குர்விந்தர் நாத் - கனடா மருத்துவமனையில்...

வெளிநாட்டில் மகன் இறந்த விவரத்தை அவரது தாயிடம் இரு வாரங்களாக உறவினர்கள் மறைத்து வந்தனர். ஆனபோதும் மகன் சடலம் வீடு வந்ததை அறிந்து தாயும் உயிர்விட, தாய் - மகன் இறுதிச் சடங்கினை உறவினர்கள் பெரும் சோகத்துடன் இன்று மேற்கொள்கின்றனர்.

பஞ்சாப்பை சேர்ந்தவர் குர்விந்தர் நாத். 24 வயதாகும் இந்த இளைஞர் மேற்படிப்புக்காக கனடா சென்றவர், அங்கே பகுதி நேரமாக பீஸா டெலிவரி ஊழியராகவும் பணியாற்றினார். ஜூலை 9 அன்று, உணவு ஆர்டர் செய்வோர் போர்வையில் மர்ம கும்பல் ஒன்று குர்விந்தர் நாத்தின் வாகனத்தை பறித்துச் சென்றது. தடுக்க முயன்ற குர்விந்தர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குர்விந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 5 தினங்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான தகவல் பஞ்சாப்பிலிருக்கும் குர்விந்தர் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

குர்விந்தர் கொலையான தகவல் அறிந்து, பஞ்சாப்பில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என சகலமானோரும் அதிர்ச்சி அடைந்தனர். குர்விந்தர் மீது பாசமாக இருக்கும் அவரது தாய் நரீந்தர் கௌர் வசம், மகன் இறந்த தகவலை தெரிவிக்காது தள்ளிப்போட்டு வந்தனர். மகன் குர்விந்தர் இறந்ததை அவரது தாயால் தாங்க இயலாது என்று உறவினர்கள் கருதியதே இதற்கு காரணம்.

ஆனால் எத்தனை நாள் அப்படித் தள்ளிப்போட முடியும்? குர்விந்தர் சடலம் வெள்ளி இரவு, டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்து சேரும் என்ற தகவல் பஞ்சாப்புக்கு சென்றது. இனிமேலும் மகன் இறந்த சேதியை தாயிடம் மறைப்பது முறையல்ல என உறவினர்கள் பக்குவமாய் எடுத்துச் சொல்ல முயன்றனர்.

மகன் இறந்த விவரங்களை அறிந்ததும், அவரது தாய் நரீந்தர் கௌர் திக்பிரமையானார். மகன் குர்விந்தர் நாத்தின் சடலம் வீடு வந்து சேர்ந்தபோது, அவரது பாசத்தாயும் உயிரை விட்டிருந்தார். தாய் - மகன் என இருவரின் இறுதிச் சடங்கையும் பெரும் சோகத்துடன் இன்று உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in