உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைன் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர், 6 மாதங்களைக் கடந்தும் தொடர்கிறது. இந்தபோரில் ரஷியா கைப்பற்றிய இடங்களை உக்ரைன் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் 'தி கீவ் இண்டிபென்டெண்ட்' என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் செய்தி தொடர்பாளர் செர்ஹை நிகிபோரோவ் தனது ஃபேஸ்புக் பதிவில், அதிபரின் கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது என தெரிவித்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஜெலன்ஸ்கியுடன் சென்ற மருத்துவர்கள் உடனடியாக அவருக்குப் பரிசோதனை செய்தனர். விபத்தில் அவருக்கு லேசான காயமே ஏற்பட்டுள்ளது. அவரது வாகன ஓட்டுநருக்கும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன. இதன் பின்னர், ஆம்புலன்ஸில் அவர் கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து பற்றி போலீஸார் முழு அளவில் விசாரணை நடத்துவார்கள் என நிகிபோரோவ் தெரிவித்து உள்ளார் என அந்த ஊடக தகவல் தெரிவிக்கிறது.