கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு நவ. 19, 20-ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 75 ஆண்டுகளாக நடைபெறும் தட்டச்சு தேர்வுகளை மாற்றி புதிய நடைமுறையை அரசு அறிவித்தது. அந்த புதிய நடைமுறையின் படி, இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் தாள்-1 ஸ்டேட்மென்ட், லெட்டர் தேர்வாகவும், தாள்- 2 ஸ்பீடு தேர்வாக நடைபெற அறிவிக்கப்பட்டது.
அதற்கு எதிராக உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் தட்டச்சு தேர்வை 2 வார காலங்களுக்கு ஒத்திவைக்குமாறு இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டது. பின்பு அவ்வழக்கில் தட்டச்சு தேர்வுகளை புதிய நடைமுறையில் (இரண்டாம் தாள் முதலாவதாகவும், முதல் தாள் இரண்டாவதாகவும்) நடத்த இடைக்கால உத்தரவு அக்.20-ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் அடிப்படையில் தட்டச்சு தேர்வுக்கான நவ. 12. 13 தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்து அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை காரணமாக நவ.12,13 ஆகிய தேதிகளில் நடைபெற வேண்டிய தட்டச்சு தேர்வு நவ.19,20 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தட்டச்சு தேர்வு வாரியத்தலைவர் அறிவித்துள்ளார்.