நாகர்கோவில் ரயில்வே போலீஸாரின் எல்லைக்குட்பட்ட ரயில் வழித்தடத்தில் இன்று ஒரேநாளில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் தற்கொலை செய்தவரின் அருகில் ஒரு பை நிறைய கற்கள் கிடந்ததால் நாசவேலைக்கு சதி நடந்திருக்குமோ என்னும் கோணத்தில் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி- நாகர்கோவில் ரயில்வே வழித்தடத்தில் சுக்குப்பாறைதேரிவிளை பகுதியில் ரயில் வழித்தடத்தில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க சடலம் ஒன்று கிடந்தது.
அந்த வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். ரயில்வே போலீஸார் அந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அடையாளம் தெரியாத அந்த சடலத்தின் அருகில் ஒரு பையில் நிறைய கற்கள் இருந்தன. இவர் மனநலம் பாதிக்கப்பட்டு கற்களுடன் வந்தாரா? அல்லது ரயிலைக் கவிழ்க்க ஏதும் சதி செய்தாரா என்னும் கோணத்தில் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் திருநெல்வேலி_நாகர்கோவில் ரயில்வே வழித்தடத்தில் மூன்றடைப்பு பாலத்தின் கீழ் பகுதியில் இன்று காலையில் நெல்லை மாவட்டம், கண்ணநல்லூரைச் சேர்ந்த மர ஆசாரி வேலை செய்துவரும் ஐயப்பன்(22) ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இவர் கடன் பிரச்சினையில் தற்கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.