ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் முகவரி கேட்பது போல் நடித்து காதில் கிடந்த கம்மலை அறுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மறுகால் தலைவிளையைச் சேர்ந்தவர் தங்ககிருஷ்ணன். இவரது மனைவி விஜய நிர்மலா(40). இவர் தன் வீட்டில் உள்ள ஆடுகளுக்காக புல் அறுப்பதற்காக கார்த்திகை வடலி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு பைக்கில் இருவர் வந்தனர். அவர்கள் விஜய நிர்மலாவிடம், தங்கள் பைக் திடீரென பழுதாகிவிட்டதாகவும் அருகில் இங்கே மெக்கானிக் ஷாப் எங்கே இருக்கிறது எனக் கேட்டனர். புல் அறுத்துக்கொண்டிருந்த விஜய நிர்மலா அதைப்பற்றி விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பைக்கில் பின் சீட்டில் இருந்தவர் விஜய நிர்மலாவின் காதில் கிடந்த கம்மலை அறுத்தார். ரிப்பேர் என வழிகேட்ட முன்னால் இருந்த வாலிபர் மின்னல் வேகத்தில் பைக்கை எடுத்துக்கொண்டு பறந்தார். இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களைத் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.