வீட்டில் கைத்துப்பாக்கியைப் பதுக்கி வைத்திருந்த வடமாநில வாலிபர்கள் இருவரை கைது செய்துள்ள வெப்படை போலீஸார் அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டக்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
பிஹாரைச் சேர்ந்த மணிஷ்குமார்(26), ஜார்க்கண்டைச் சேர்ந்த சாகர் (19) இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படையை அடுத்த வால் ராஜ்பாளையம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். அவர்கள் இருவரும், வடமாநிலத்தை சேர்ந்தவர்களை, நூற்பாலைக்கு வேலைக்கு அனுப்பும் அனுப்பும் ஏஜெண்ட் என தெரிவித்துள்ளனர்.
ஆனால், இவர்கள் இருவரின் நடமாட்டம் சந்தேகம் ஏற்படும் வகையில் இருந்ததால், அதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வெப்படை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து வெப்படை போலீஸார் வாலிபர்களின் நடமாட்டத்தையும், அவர்கள் தங்கியிருந்த வீட்டையும் கண்காணித்தனர். இந்நிலையில் இன்று காலை வடமாநில வாலிபர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்தனர். அங்கு ஒரு கைத்துப்பாக்கி, எட்டு தோட்டாக்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மணீஸ் குமார், சாகர் இருவரையும் கைது செய்த போலீஸார் பதுக்கி வைக்கப்பட் டிருந்த துப்பாக்கியையும், தோட்டாவையும் கைப்பற்றினர். மேலும் இவர்கள் எதற்காக வெப்படைக்கு வந்தனர், இவர்களின் நோக்கம் என்ன, எதற்காக கைத்துப்பாக்கி, தோட்டா வைத்திருந்தனர், இவர்களுடன் யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர் என போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.