
பட்டுக்கோட்டை அருகே, சாலையோரம் நின்றவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விவசாய கூலித்தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளர்கள் நடேசன்(65), முத்துசாமி(63). இவர்கள் இருவரும், இன்று காலை தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் உள்ள கூட்டுறவு சங்கம் அருகே பால் வியாபாரம் செய்யும் சாமிக்கண்ணு உள்ளிட்டோரிடம் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார், திடீரென சாலையின் வலதுபுறமாக திரும்பி, சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில், நடேசன், முத்துசாமி இருவரும் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார் வேகமாக வந்ததைக் கவனித்த பால் வியாபாரி சாமிக்கண்ணு அருகே உள்ள பள்ளத்தில் குதித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் விரைந்து சென்று நடேசன், முத்துசாமி ஆகியோருடைய உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர். கார் மோதி விவசாய கூலித்தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.