வேன் ஓட்டுநர் அடித்து கொலை
வேன் ஓட்டுநர் அடித்து கொலைகுடிக்கப் பணம் கேட்டுத் தராததால் வேன் ஓட்டுநரைக் கல்லால் அடித்துக் கொன்ற இருவர் கைது!

குடிக்கப் பணம் தராதவர் கல்லால் அடித்துக் கொலை; இருவர் கைது!

மது போதையால் வேன் ஓட்டுநரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு கல்லால் அடித்துக் கொன்ற சம்பவத்தில் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம், பாவாபேட்டை தெருவை சேர்ந்தவர் அயூப் கான்(50) வேன் ஓட்டுநரான இவர் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக ஓரமாக வேனை நிறுத்தி மது அருந்தியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இரு இளைஞர்கள் அயூப் கானிடம் பணம் கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இளைஞர்களுக்கும் அயூப்கானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் இளைஞர்கள் அயூப் கானை சரமாரியாக தாக்கியுள்ளனர். நிலைகுலைந்து கீழே விழுந்த அயூப் கான் மீது அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டுள்ளனர்.

பலத்தக் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்து இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். அவ்வழியே சென்றவர்கள் அயூப்கான் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீஸில் புகார் செய்துள்ளனர். போலீஸார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கொலையில் தொடர்புடைய சேக்குப்பேட்டையை சேர்ந்த பிரதீப் குமார் (20), பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார்(23) ஆகிய 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பணம் கொடுக்காததால் வேன் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in