
வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி சென்ற 1430 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் அரசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் மதுராந்தகத்தை அடுத்த அத்திவாக்கம் மற்றும் காவாதூர் கிராமத்தைச் சேர்ந்த இருவர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவதை போலீஸார் கண்டிபிடித்தனர்.
தமிழக அரசு வழங்கும் விலையில்லா ரேஷன் அரிசியை தச்சூர் சீர்வாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதனை வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்த ராஜேஷ் மற்றும் கெஜராஜ் ஆகிய இருவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். 29 மூட்டைகளில் 1430 கிலோ ரேஷன் அரிசியை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.