டியூசன் படிக்க வந்த மாணவருக்கு சரமாரியாக கத்திக்குத்து: நடுரோட்டில் நடந்த பதறவைக்கும் சம்பவம்

டியூசன் படிக்க வந்த மாணவருக்கு சரமாரியாக கத்திக்குத்து: நடுரோட்டில் நடந்த பதறவைக்கும் சம்பவம்

டியூசன் சென்டருக்கு வெளியே சத்தம் போட்டதைக் கண்டித்த 17 வயது மாணவரின் தலையில் வாலிபர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள சங்கம் விஹாரில் பள்ளி மாணவர்களுக்கு மகேஷ் என்பவர் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். இந்த டியூசன் சென்டரில் 1 முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நிறைய பேர் படிக்கின்றனர். இந்த டியூசன் சென்டர் வெளியே ஷிஷ்பால்(25) என்ற வாலிபர் அளவிற்கு அதிக முறையில் சத்தம் போடுவது உள்ளிட்ட அடாவடி நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று இரவு டியூசன் சென்டருக்கு வெளியே அவர் சத்தம் போட்டுக் கத்தியதால் பாடம் நடத்த முடியாமல் மகேஷ் வெளியே வந்து கண்டித்துள்ளார். அப்போது அவருக்கும் ஷிஷ்பாலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதைப் பார்த்த டியூசன் படிக்க வந்த 17 வயது மாணவர் ஷிஷ்பாலைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷிஷ்பாலின் 17 வயது தம்பி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது அண்ணனிடம் கொடுத்துள்ளார். அந்த கத்தியால் மாணவனின் தலையில் ஷிஷ்பால் சரமாரியாக குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் மாணவர் மயங்கி விழுந்தார். இதனால், அங்கிருந்து ஷிஷ்பாலும், அவரது தம்பியும் தப்பியோடி விட்டனர். உடனடியாக மகேஷ் உள்ளிட்ட மாணவர்கள், கத்திக்குத்தில் காயமடைந்த மாணவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், மாணவரைக் கத்தியால் குத்திய ஷிஷ்பால், அவரது தம்பி ஆகியோரைப் பிடிக்க அவர்களது வீட்டிற்கு போலீஸார் இன்று சென்றனர். அப்போது அவர்கள் மீது ஷிஷ்பாலும், அவரது தம்பியும் திடீரென செங்கற்களை வீசித்தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அவர்களது வீட்டின் மேற்புறக் கூரையை உடைத்து உள்ளே சென்ற போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in