ஸ்டாலின்கூட அதிமுக பொதுச்செயலாளராகலாம்: டிடிவி தினகரன் கிண்டல்

மதுரையில் பேசிய டிடிவி தினகரன்
மதுரையில் பேசிய டிடிவி தினகரன்

மதுரையில் அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், அதிமுக கம்பெனியைப் போல ஆகிவிட்டது, யார் அதிகமாக முதலீடு செய்கிறாரோ அவர் தலைமை ஆகிவிடலாம் என்றும், ஸ்டாலின் நினைத்தால் கூட அங்கே பொதுச்செயலாளர் ஆகிவிடலாம் என்றார்.

மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த அமமுக சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான இ. மகேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "மக்களின் பணத்தை தண்ணீராக செலவழித்துக் கொண்டிருந்தவர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் இருந்த தலைமைப் பதவியை பணம் கொடுத்து வாங்கியிருக்கின்றனர். எந்த வழக்கில் சிறைக்குச் செல்ல போகின்றோம் என்ற அச்சத்துடன் ஈபிஎஸ் அணியினர் இருந்து வருகின்றனர். உண்மையான அம்மாவின் இயக்கம் அமமுக தான். உடல் அங்கும், உள்ளம் இங்கும் என்ற நிலையில் தான் சிலர் அதிமுகவில் உள்ளனர். விரைவில் அவர்கள் இங்கு வருவார்கள். அதிமுக கம்பெனி போல ஆகிவிட்டது. யார் அதிகமாக முதலீடு செய்கிறாரோ அவர் தலைமை ஆகிவிடலாம். ஸ்டாலின் நினைத்தால் கூட அங்கே பொதுச்செயலாளர் ஆகிவிடலாம் என்ற அவல நிலையில் தான் உள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இல்லை. அந்த காலகட்டத்தில் தளவாய்சுந்தரம் போன்றோர் தான் பொதுச்செயலாளர் சசிகலாவை, சந்தித்து என்னைத் தேர்தலில் நிற்க வேண்டும் என கூறினார்கள். அப்போது, தான் எடப்பாடி பழனிசாமிக்கு நான் தலைமைக்கு வந்துவிடுவேன் என்ற பயம் வந்தது. எடப்பாடி அணியினரை ஊழல் செய்ய வேண்டாம் என்று கூறினேன். ஆனால், அவர்கள் கேட்கவில்லை, அதனால் தான் தனிக்கட்சி் தொடங்க எண்ணினேன். தற்போது, எடப்பாடி அணியினர் செய்த ஊழலுக்கு நாள்தோறும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து வருகிறது. அமமுக ஆட்சிக்கு வந்தால்தான் ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்க. முடியும். ஐந்து வருடத்தில், மூன்று பொதுச்செயலாளர்களை மாற்றி விட்டனர்" என்றார்.

மேலும், "அதிமுகவை மீட்டெடுப்பவர்கள் அமமுகவினர் தான். அதிமுகவின் சண்டையைக் கண்டுகொள்ள வேண்டாம், நமது சின்னமான குக்கரையும், அமமுகவின் கொடியையும் பட்டி தொட்டி எங்கும் எடுத்துசெல்ல வேண்டும். யாருக்காகவும் பின்வாங்கப் போவதில்லை, யாரோடும் சமரசம் செய்வதில்லை. ஜெயலலிதாவின் ஆட்சியை அமமுக தலைமையில் கொண்டு வருவேன். தொண்டர்களை மட்டுமே நம்பி கழகத்தை நடத்தி வருகிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும், அதற்காக நாம் அனைவரும் அரும்பாடு பட வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in