சென்னை மேயர் புகைப்படத்தை வாட்ஸ் - அப் டிபி-யாக வைத்து பணம் பறிக்க முயற்சி: மண்டல அதிகாரிகளைக் குறிவைத்து இறங்கியுள்ள கும்பல்!

மேயர் பிரியா.
மேயர் பிரியா.

வாட்ஸ் அப்பில் மேயர் படத்தை முகப்பாக (டி.பி) வைத்து மண்டல அதிகாரிகளிடம் பணப்பறிப்பில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மேயரின் உதவியாளர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்கள் வாயிலாக அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி மோசடி கும்பல் பணப்பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. குறிப்பாக ஈரோடு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி கிப்ட் கார்டு அனுப்பி அதில் பணம் போடக்கூறி பணப்பறிப்பில் ஈடுபட்ட சம்பவங்களும் நடைபெற்றது.

இதே போல சென்னை மாநகராட்சி மேயரான பிரியாவின் புகைப்படத்தை வாட்ஸ் அப் முகப்பாக (டி.பி) வைத்து மோசடி கும்பல் பணப்பறிப்பில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி மேயர் பிரியாவின் உதவியாளர் சிவசங்கர் பெரியமேடு காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

அதில், மேயரான பிரியாவின் புகைப்படத்தை டிபியாக வைத்துக்கொண்டு மோசடி கும்பல் ஓன்று வாட்ஸ் அப் மூலமாக மண்டல அதிகாரிகளிடம் வழக்கம் போல பேசத் தொடங்கியுள்ளது. அதன் பிறகு அமேசான் கிப்ட் கார்டு அனுப்பி அதில் பணம் அனுப்ப வற்புறுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மண்டல அதிகாரிகள், மேயர் பிரியாவிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதனால் மேயர் பிரியாவின் சார்பில் பெரியமேடு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இதுபோன்ற மோசடிகள் தொடர்ச்சியாக நடைபெறுவதால், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து மோசடி கும்பல் பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து அவர்களைக் கண்டறியும் பணியில் சைபர் கிரைம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சென்னை மேயர் படத்தை வைத்து ஒரு கும்பல் வசூல் வேட்டையில் இறங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in