திருச்சி காவிரி பாலம் இன்று முதல் முற்றிலுமாக மூடல்: போக்குவரத்து மாற்றத்தின் முழு விவரம்!

திருச்சி காவிரி பாலம் இன்று முதல் முற்றிலுமாக மூடல்: போக்குவரத்து மாற்றத்தின் முழு விவரம்!

திருச்சியின் முக்கிய போக்குவரத்தாக திகழும்  காவிரி ஆற்றுப் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தது.  தற்போது அவற்றிற்கும் அனுமதி மறுக்கப்பட்டு  இன்று முதல் முழுமையாக மூடப்படுகிறது. 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் பகுதிகளை இணைக்கும் வகையில்  காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலம் கடந்த 1976-ம் ஆண்டு, முன்னாள் மத்திய உள்ளாட்சித்துறை அமைச்சர் பிரம்மானந்தா ரெட்டியால் திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தை இணைக்கும் முக்கிய பாலமாக விளங்குவதால் இந்தப் பாலத்தை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர். பாலம் கட்டி 45 ஆண்டுகளுக்கும் மேலானதால் இந்த பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்து வந்தது. காவிரி பாலத்தில் தூண்களுக்கு இடையே ஏற்பட்ட இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதுவரை சீரமைப்பு பணிக்காக மட்டும் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1.35 கோடி, 2018ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.35 லட்சம், 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.15 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் இப்பாலம் சேதமடைந்து உள்ளதால் நெடுஞ்சாலைத்துறையின் தொழில்நுட்பக்குழுவினர் பாலத்தை ஆய்வு செய்தனர். பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தின் பேரிங்குகள் முழுமையாக சேதமடைந்துள்ளது தெரியவந்தது. 

இதனால் பாலத்தை உடனடியாக சீரமைக்க ரூ.6.87 கோடியை தற்போதைய அரசு ஒதுக்கியுள்ளது.  பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதையொட்டி மேற்படி காவிரிப் பாலத்தில்  10.09.2022 அன்று முதல் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு மற்ற வாகனங்கள்  மாற்றுப்பாதையில் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப் பட்டிருந்தது.

இந்நிலையில் பாலத்தூண்களின் மேல் அதிர்வு தாங்கிகள் (Elastomeric Bearings) பொருத்தும் பணி ஒவ்வொறு தட்டுகளாக (Deck Slabs) மேற்கொள்ளும் நிலையில், பாலத்தில் இரு சக்கர வாகனங்கள் பயணித்தால் தட்டுகளின் தளமட்டம் மாறுபாட்டிற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது. எனவே இப்பணி நாளை 21.11.2022 முதல் துவங்க உள்ளதால் புனரமைப்பு பணியை விரைவில் முடிக்க 20.11.2022 நள்ளிரவு முதல் பாலத்தில் செல்லும் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப் பட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வித வாகனங்களும் கீழ்கண்ட மாற்றுப்பாதையில் செல்ல உத்தரவிடப்படுகிறது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்வோர்  காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாக (காவிரி தென் கரை சாலை) சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை - திருச்சி - திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை (காவிரி இடது கரை சாலை) வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக்கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து இடதுபுறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவானைக்கோவில் வந்தடைந்து வலதுபுறம் திரும்பி ட்ரங்க் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை - திருச்சி - திண்டுக்கல் - சாலை) பழைய பாலத்தின் வழியாக வந்து வலதுபுறம் திரும்பி ஓயாமரி வழியாக (காவிரி தென்கரை சாலை) அண்ணாசிலை வந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம்.

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தைத் தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ.1. டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம். அவ்வாறே சென்னையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1.டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நெ.1.டோல்கேட் சென்று செல்லலாம்.  இதற்கு நல்ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்கிடும்படி  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in