சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் முருகனுக்கு சிகிச்சை: மாமியார் வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

முருகன்
முருகன்

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக்கோரிய மனுவிற்கு தமிழக காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது

இது தொடர்பாக முருகனின் மாமியாரும், நளினியின் தாயாருமான பத்மா தாக்கல் செய்துள்ள மனுவில், சிறையில் உள்ள முருகனை அவருடைய வழக்கறிஞர்கள் அண்மையில் சந்தித்தபோது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 32 நாட்களாக உண்ணாவிரதம் இருப்பதால் உடல் எடை குறைந்து பேச முடியாத நிலையில் இருக்கிறார். எனவே முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக்கோரி வேலூர் சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க தமிழக அரசு, சிறைத்துறை டி.ஜி.பி., ஐ.ஜி மற்றும் வேலூர் சிறைத்துறை எஸ்.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து பத்மாவின் மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in