
புறாவை பிடிக்க சென்றபோது ஜன்னல் மேல் சிக்கி கொண்ட பூனையை 3 நாட்களுக்கு பின்னர் உயிருடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சென்னை கோயம்பேடு சின்மயா நகர் கிருஷ்ணா தெருவில் 3 அடுக்கு கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் சிங்காரவேலன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூனைகுட்டி ஒன்று புறாவை பிடிப்பதற்காக 3 மாடியில் உள்ள ஜன்னல் சன்ஷேட் மீது இறங்கியது. பின்னர் அங்கிருந்து வெளியே வர வழியில்லாததால் அங்கேயே சிக்கி கொண்டது.
3 நாட்கள் கழித்து இன்று பூனையில் சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர் சிங்காரவேலன் சென்று பார்த்தபோது ஜன்னல் மேல் பகுதியில் பூனை இருப்பதை கண்டு அதனை எடுக்க முயன்றும் முடியாததால் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் அண்ணாநகர் தீயணைப்பு அதிகாரி ஜெயராம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி பூனையை பத்திரமாக மீட்டனர். 3 நாட்களாக வெளியே வரமுடியாமல் சிக்கி கொண்ட பூனையை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு குடியிருப்பு வாசிகள் பாராட்டு தெரிவித்தனர்.