
அனைத்து ஊர்களில் இருந்தும் பெருங்களத்தூர் வழியாக சென்னை வந்தடையும் பேருந்துகளை இனி தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் இருந்து திண்டிவனம் வழியாக சென்னை வரும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் பகல் நேரத்தில் பெருங்களத்தூரில் இருந்து மதுரவாயில் புறவழிச்சாலையில் சென்று கோயம்பேட்டை அடைகின்றன. இதனால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பெருங்களத்தூரில் இறங்கி, அங்கிருந்து மாநகரப் பேருந்துகளில் செல்ல வேண்டிய சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் இதனை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பெருங்களத்தூர் வழியாக வரும் அனைத்து பேருந்துகளும் பகல் நேரத்தில் தாம்பரம் வழியாகவே இயக்கப்பட வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தாம்பரம் பேருந்து நிறுத்தத்திற்கு இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கிவிட அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ள போக்குவரத்துக் கழகத்தின் அந்த உத்தரவில் மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து கிளை மேலாளர்களுக்கும் இந்த உத்தரவை அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார். போக்குவரத்து கழகத்தின் இந்த உத்தரவால் வெளியூரில் இருந்து சென்னை வரும் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.