கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்க என்ஐஏ-க்கு பரிந்துரை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்க என்ஐஏ-க்கு பரிந்துரை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோவை உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்ற பரிந்துரை செய்ததுடன் கோவையில் பாதுகாப்பினை தொடர்ந்து உறுதி செய்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23.10.2022 அன்று நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும் பொதுவான சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் தற்போதைய நிலை குறித்தும் கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு மேலும் உறுதி செய்திடவும் முதல்வர் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இது போன்ற சம்பவங்களின் விசாரணையில் மாநிலம் தாண்டிய பரிணாமங்களும் பன்னாட்டு தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால் இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரை செய்திட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திடவும் மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல்துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிடவும், கோவை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும் கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், மாநிலத்தில் உளவுப்பிரிவில் கூடுதல் காவல்துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும், இதுபோன்ற சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களை பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்பவருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும், அவர்களை ஊக்குவித்திடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, காவல்துறை கூடுதல் இயக்குநர் (நுண்ணறிவு) டேவிட்சன் தேவாசிர்வாதம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in