சென்னையில் விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி: வேன் டிரைவர் கைது

பலியான மாணவர்கள் பிரவீன், ஹரி
பலியான மாணவர்கள் பிரவீன், ஹரி

சென்னை தரமணி, தந்தை பெரியார் நகர், கருணாநிதி 3வது தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(19). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் ஹரி(17) வேளச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரவீனும் ஹரியும் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டு சென்றனர். பிரவீன் வாகனத்தை ஓட்டிச் செல்ல, பின்னே ஹரி அமர்ந்து சென்றார். தரமணி 100 அடி சாலையில் அதிவேகமாக சென்றபோது ஹரி தனது செல்போனில் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை வீடியோ பதிவு செய்து கொண்டே சென்றதாக கூறப்படுகிறது.

தரமணி சந்திப்பு அருகே சென்றபோது எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் இருந்து வந்த லோடு வேன் ஒன்று திரும்பியது. இதைப் பார்த்த பிரவீன், வேன் மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த கிண்டி போக்குவரத்து போலீஸார் இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்றிரவே மருத்துவமனையில் பிரவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஹரியும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சம்பவம் குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தரமணி, கட்டபொம்மன் தெருவை சேர்ந்த லோடு வேன் ஒட்டுநர் குணசேகரன் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பிரவீனுக்கு ஒட்டுநர் உரிமம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. விபத்தில் சிக்கி இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in