
திருநெல்வேலி மாநகரத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு, இதுவரை அபராதம் கட்டாதவர்கள் ஒரு வார காலத்திற்குள் அபராதத்தைக் கட்டாவிட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துவருகிறார். அந்தவகையில் கடந்த 3 மாதங்களில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டுவது, ஒரே பைக்கில் மூன்று பேர் செல்வது, அசுர வேகத்தில் ஓட்டுவது உள்ளிட்ட குற்றங்களுக்காக இதுவரை 23 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் 8 ஆயிரம் பேர் இதுவரை அபராதத் தொகை கட்டியுள்ளனர். சிலபேர் ஹெல்மெட் போடாமல் செல்வதைப் பார்த்து காவலர்கள் வாகன எண்ணைக் குறித்து அதன்பேரில் வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அவர்களில் பலருக்கும் அவர்கள் மீது போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது தெரியாது. இதை அவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் நெல்லை மாநகர காவல் எல்லையில் உள்ள சந்திப்பு, சமாதானபுரம் காவல் நிலையங்களில் இதற்கென பிரத்யேக அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இருந்து அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதை இன்று திறந்துவைத்து செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், “அபராதம் விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட ஒருவார காலத்திற்குள் அபராதம் கட்டாவிட்டால் வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.