திருநெல்வேலியில் போக்குவரத்துத் தலைமைக் காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம், அரியகுளம் ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் ரவி. இவர் திருநெல்வேலி டவுண் பகுதியில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலையில் வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் இருந்த ஏராளமான மாத்திரைகளைச் சாப்பிட்டு ரவி தற்கொலைக்கு முயன்றார்.
அவர் வீட்டில் மயங்கிக் கிடப்பதைப் பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ரவிக்கு, தன் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரோடு கருத்து வேறுபாடு இருந்துவந்தது. இதனோடு அவர் தன் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடமும் தொடர்ந்து தன் வேலை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி வந்துள்ளார். இதனால் குடும்ப பிரச்சினையில் ரவி தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணிச்சுமையினால் தற்கொலைக்கு முயன்றாரா என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.