
தை அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதுடன், பாம்பன் சாலை பாலத்தில் வாகனம் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி தங்கதுரை தெரிவித்துள்ளார்.
ஜன.21-ல் தை அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்ய தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் மூலம் வருவர். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை (ஜன.20) மதியம் முதல் ஜன.21 இரவு வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
ராமேஸ்வரம் வரும் வாகனங்கள், இதர நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள், தனுஷ்கோடியில் இருந்து வரும் வாகனங்கள் இடையூறு இன்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் வரும் வழியில் சாலை ஓரங்கள், பாம்பன் சாலை பாலத்தில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உள்பட நகரின் பாதுகாப்பு பணியில் 1000 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
குற்ற சம்பவங்களை தவிர்க்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது என எஸ்பி தங்கதுரை தெரிவித்துள்ளார்.