கம்பம் அருகே சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
தேனி மாவட்டம், கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுருளி அருவி சுற்றுலா, புண்ணிய தலமாக உள்ளது. இந்த அருவியில் குளித்த பின் மக்கள் சாமி தரிசனம் செய்து வழக்கம். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையால், சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு , தூவானம் அணை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுருளி அருவியில் காட்டு நீரோடை கலந்து கொட்டியதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வனத்துறையினர் கன மழை தொடர்ந்ததால், அருவி பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கம்பம் கிழக்கு வனச்சரகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கு சீரானதை தொடர்ந்து, சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் குளிக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.