அசுர வேகத்தில் மோதிய சுற்றுலா பஸ்; அப்பளம்போல் நொறுங்கிய அரசு பஸ்: மாணவிகள் உள்பட 9 பேர் பலி

அசுர வேகத்தில் மோதிய சுற்றுலா பஸ்; அப்பளம்போல் நொறுங்கிய அரசு பஸ்: மாணவிகள் உள்பட 9 பேர் பலி

கேரளத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது சுற்றுலா வாகனம் மோதிய விபத்தில் 5 மாணவ- மாணவிகள் உள்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாக்குளம் மாவட்டம் மூகாந்துரை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இருந்து ஊட்டிக்கு நேற்று மாலை சுற்றுலா கிளம்பினர். இதற்காக தனியார் சொகுசு பேருந்து ஒன்றை வாடகைக்குப் பிடித்தனர். இதில் 42 மாணவ, மாணவிகள், 5 ஆசிரியர்கள் என மொத்தம் 47 பேர் பயணம் செய்தனர். இந்தப் பேருந்து நேற்று நள்ளிரவு 12.20 மணிக்கு பாலக்காடு, வடக்கன்சேரி புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கேரள அரசுப்பேருந்து மீது மோதியது.

இந்த கோரவிபத்தில் கேரள அரசுப்பேருந்தின் பின்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மோதிய வேகத்தில் தனியார் சுற்றுலா வாகனமும் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மூன்று மாணவர், இரண்டு மாணவியர், ஒரு ஆசிரியர், அரசுப் பேருந்தில் இருந்த மூன்று பயணிகள் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். 41 பேர் பாலக்காடு அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பாலக்காடு போலீஸார் நடத்திய விசாரணையில், பள்ளி சுற்றுலாப் பேருந்து அதிவேகமாக வந்ததே விபத்து ஏற்படக் காரணம் எனத் தெரியவந்தது. இந்தக் கோரவிபத்து கேரளத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in