
கேரளாவிலிருந்து வேளாங்கண்ணிக்குச் செல்லும் வழியில் தஞ்சாவூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 40 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து வேளாங்கண்ணியில் நடைபெறும் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 51 பேர் சுற்றுலா பேருந்தில் திருச்சி - தஞ்சை மன்னார் குடி வழியாக சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், ஒரத்தநாடு மன்னார்குடி சாலை ஒக்கநாடு கீழையூர் அருகே வந்து கொண்டிருக்கும்போது, வளைவில் திரும்பும்போது பக்கவாட்டு சுவரில் மோதி பேருந்து கவிழ்ந்தது. பேருந்து கவிழ்ந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்ததை அடுத்து, காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சை, ஒரத்தநாடு, மன்னார்குடி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 63 வயது லில்லி மற்றும் ஒன்பது வயது சிறுவன் ரயான் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த விபத்து குறித்து ஒரத்தநாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் 2 பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.