தலையில் கரகம், கையில் சிலம்பம்: ராமேஸ்வரத்தில் சுற்றுலா பொங்கல் விழாவில் அசத்திய ராமநாதபுரம் கலெக்டர்
ராமேஸ்வரத்தில் நடந்த சுற்றுலா பொங்கல் விழாவில் ராமநாதபுரம் கலெக்டர் சிலம்பம் சுழற்றி, தலையில் கரகம் வைத்து ஆடி மகிழ்ந்தார்.
உலக பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்திற்கு வெளி நாட்டினர் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் விதமாக சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழர் திருநாளான பொங்கல் விழா சுற்றுலாப் பயணிகளை ஒன்றினைத்து சமத்துவ பொங்கல் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.
இதன்படி, ராமேஸ்வரம் அருகே ராமகிருஷ்ணாபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய் கால் குதிரை, உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ், சிலம்பாட்ட குழுவினருடன் இணைந்து சிலம்பம் சுழற்றினார்.
இதை தொடர்ந்து ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் ஆகிய கலைக்குழுவினருடன் இணைந்து தலையில் கரகம் சுமந்து ஆடி மகிழ்ந்தார். இதையடுத்து அங்கு நடந்த கிராம விளையாட்டு போட்டிகளில் வெற்றி மாணவ, மாணவிகள், இளைஞர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார்.