பஞ்சாப் சுகாதார அமைச்சர் சேத்தன் சிங் ஜோரம்ஜ்ராவால் கேமராக்களுக்கு முன்பு நேற்று அவமானப்படுத்தப்பட்ட ஃபரித்கோட் பாபா ஃபரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜ் பகதூர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பஞ்சாப் மாநில சுகாதார அமைச்சர் சேத்தன் சிங் ஜோரமஜ்ரா நேற்று ஃபரித்கோட்டில் உள்ள பாபா ஃபரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது மருத்துவமனை வார்டுகளில் தூய்மை குறித்த நோயாளிகள் புகார் கூறியதால், பத்திரிகையாளர்கள் மற்றும் கேமராமேன்களுடன் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து, துணைவேந்தர் ராஜ் பஹதூரை நோயாளிகளுக்கான படுக்கையில் அதிரடியாக படுக்கச் சொன்னார் அமைச்சர். அப்போது தயங்கியபடியே சில வினாடிகள் படுத்த துணைவேந்தர் மீண்டும் எழுந்தார். இந்த காட்சிகள் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நேற்று பரபரப்பானது.
அந்த வீடியோவில் "எல்லாம் உங்கள் கையில், எல்லாம் உங்கள் கையில்" என்று அமைச்சர் ஜோரமஜ்ரா படுக்கையில் இருந்து எழுந்தவுடன் துணைவேந்தரிடம் சொல்கிறார். இந்த நேரத்தில், ஒருவர் மெத்தையை உயர்த்தி அதன் மோசமான நிலையை சுட்டிக்காட்டுகிறார். அப்போது அமைச்சர் ஸ்டோரைக் காட்டும்படி துணைவேந்தரிடம் கேட்கிறார்.
இந்த சூழலில் துணைவேந்தர் ராஜ் பஹதூர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பஞ்சாப் அமைச்சரின் நடத்தையை "மலிவான நாடகங்கள்" என்று குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், துணைவேந்தரை அமைச்சர் அவமதித்து விட்டதாக தெரிவித்துள்ளன.