
டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தவும், சிங்கப்பூர்-மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிக்கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் 2024 ஜனவரியில் தமிழ்நாடு அரசு நடத்த உத்தேசித்துள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தொழில் முதலீட்டாளர்களை அழைப்பதற்காகவும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வெற்றிகரமாக சுற்றுப்பயணத்தை தாம் மேற்கொண்டுள்ளதைக் குறிப்பிட்டு, தனது பயணத்தின் போது அரசு மற்றும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களை குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை சந்தித்ததை குறிப்பிட்டுள்ளார்.
நேரடி விமான இணைப்பு இல்லாததால், சென்னைக்கும், டோக்கியோவுக்கும் இடையிலான பயண நேரம் சுமார் 7 மணி நேரம் இரட்டிப்பாகியுள்ளதாகவும், சென்னை- டோக்கியோ இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள ஜப்பானிய தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருப்பதாகவும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 2024 ஜனவரி மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு நடத்து உள்ள நிலையில் ஜப்பானிலிருந்து அதிக முதலீடுகளை ஈர்த்திட ஏதுவாக நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவது உண்மையில் வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், அவற்றை கருத்தில் கொண்டு சென்னைக்கும், டோக்கியோவுக்கும் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல் சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த 4 லட்சம் பேர் கணிசமான அளவில் வசித்து வருவதாகவும், அவர்கள் இன்னும் தமிழ்நாட்டில் தங்கள் சொந்த நகரங்கள் மற்றும் கிராமங்களில், முக்கியமாக தென் தமிழ்நாட்டில் தொடர்புகளை கொண்டுள்ளதாகவும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து பலர் சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்கின்றனர் என்றும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். சிங்கப்பூருக்கும், சென்னைக்கும், திருச்சிக்கும் இடையே தினசரி விமான சேவையும், சிங்கப்பூருக்கும், கோயம்புத்தூருக்கும் இடையே தினசரி ஒரு விமானம் இயக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் சிங்கப்பூருக்கும், மதுரைக்கும் இடையே வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே விமான சேவை உள்ளதாக முதல்வர் சுட்டிகாட்டியுள்ளார்.
சிங்கப்பூருக்கும், மதுரைக்கும் இடையே அதிக விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்ற பிரச்சினையை சிங்கப்பூர் அரசின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் தன்னை சந்தித்தபோது எழுப்பியதாகவும், இதேபோன்ற கோரிக்கையை சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் பலரும் முன்வைத்ததாகவும் முதல்வர் குறிப்பிட்டு, சிங்கப்பூருக்கும், மதுரைக்கும் இடையில் அதிக விமானங்களை இயக்கிட அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சாதகமாக பரிசீலித்திட ஒன்றிய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான இணைப்பை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் மற்றும் சிங்கப்பூர்- மதுரை இடையே விமானங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் ஒரு தினசரி விமானமாக அதிகரிக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை தான் மீண்டும் வலியுறுத்துவதாகவும் இவற்றை முன்னுரிமை அடிப்படையில் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியா பரிசீலித்திட வேண்டுமென்று முதல்வர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.