
சீர்காழி அருகே உலக பிரசித்தி பெற்ற திருநாங்கூர் நாராயண பெருமாள் கோயிலில் 129-ம் ஆண்டு 11 தங்க கருடசேவை உற்சவம் இன்று அதிகாலை சிறப்புடன் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை வழிபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருநாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாங்கூர் ஸ்ரீ நாராயண பெருமாள், ஸ்ரீ குடமாடு கூத்தர், ஸ்ரீ செம்பொன்னரங்கர், ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீ வண்புருடோத்தம பெருமாள், ஸ்ரீ வைகுந்தநாதன், ஸ்ரீ அண்ணன் பெருமாள், ஸ்ரீவரதராஜ பெருமாள், ஸ்ரீமாதவப்பெருமாள், ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன்' ஆகிய 11 திவ்யதேச கோயில்கள் அமைந்துள்ளன.
இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் உலக பிரசித்தி பெற்ற 11தங்க கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கருட சேவை இன்று அதிகாலை நடைபெற்றது. கருடசேவையை முன்னிட்டு நேற்று திருநகரி ஸ்ரீ கல்யாணரெங்கநாதர் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு 11 திவ்ய தேசங்களுக்கும் சென்று கருடசேவைக்கு வருமாறு பெருமாள்களை அழைத்தார்.
அவரது அழைப்பை ஏற்று 11 பெருமாள்களும், தங்களது கோயில்களில் இருந்து புறப்பட்டு நாங்கூர் மணிமாடக்கோயிலில் ஸ்ரீ நாராயண பெருமாள் கோயிலில் நேற்று இரவு எழுந்தருளினர். அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 11 பெருமாள்களும் கோயில் மண்டபத்தில் எழுந்தருள, சிறப்பு திருமஞ்சணம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை மணிமாடக் கோயில், ராஜகோபுர வாயிலில் மணவாள மாமுணிகளும், ஹம்ஸவாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒருவராக தங்க கருடவாகனத்தில் எழுந்தருள, அவர்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கும்ப தீப ஆரத்தி எடுக்கப்பட்டு தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களைப் பாடினர். தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது. கருடசேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.