பீர் பாட்டிலை வீசி ரகளை; சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

பீர் பாட்டிலை வீசி ரகளை; சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பீர் பாட்டிலை வீசி ரகளையில் ஈடுபட்டதால் பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்று மதியம் கல்லூரியை முடித்துவிட்டு தனது சக கல்லூரி நண்பர்களுடன் பேருந்தில் (தடம் எண்21) சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள பல்லவன் மேம்பால சிக்னலில் இறங்கி உள்ளார். அப்போது, அங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் பீர் பாட்டிலுடன் பச்சையப்பன் கல்லூரிக்கு ஜே என்று கூச்சலிட்டவாறு வந்தனர். அப்போது திடீரென புதுக்கல்லூரி மாணவரை முகத்தில் சரமாரியாக குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் காயமடைந்த மாணவரை மீட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்த போது அந்த மாணவனை விடாமல் துரத்தி சென்ற கும்பல் சென்ட்ரல் ரயில் நிலையத்தினுள் நுழைந்து கையில் வைத்திருந்த பீர் பாட்டில் உள்ளிட்ட சில ஆயுதங்களை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த சென்ட்ரல் ரயில்வே போலீஸார் அராஜகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை பிடிக்க சென்றபோது மாணவர்கள் சிதறி மெட்ரோ ரயில் நிலையம் வழியாக தப்பியோடிவிட்டனர். 15 கல்லூரி மாணவர்களை மட்டும் போலீஸார் மடக்கி பிடித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், புதுக்கல்லூரி மாணவர் ஒருவரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கெத்துகாட்டுவதற்காக துரத்தி சென்று தாக்கியது தெரியவந்தது. மேலும் மோதலுக்கான காரணம் வேறு ஏதும் உள்ளதா? என்ற கோணங்களில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் ரகளையில் ஈடுபட்ட மற்ற மாணவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in