`கனியாமூர் பள்ளியில் பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் திரும்ப ஒப்படைக்கவும்'- தண்டோரா அறிவிப்பால் பீதி

`கனியாமூர் பள்ளியில் பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் திரும்ப ஒப்படைக்கவும்'- தண்டோரா அறிவிப்பால் பீதி

சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற வன்முறையின்போது அங்கிருந்த பொருட்களை தூக்கிச் சென்றவர்கள் அவற்றைத் திரும்பத் தரவில்லை என்றால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தண்டோரா போடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் நடந்த 17-ம் தேதி வன்முறையாக வெடித்தது. பள்ளிக்கு எதிரே திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் அந்த பள்ளியை அடித்து நொறுக்கினர்.

பள்ளியின் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பள்ளியின் உடைமைகளும் எரித்து நாசமாக்கப்பட்டன. பள்ளியில் இருந்த நாற்காலி, மேஜை, பெஞ்சுகள், ஏர் கூலர் உள்ளிட்ட பல பொருட்களை வன்முறையாளர்கள் தூக்கிச் சென்றனர். இரு சக்கர வாகனங்களிலும், தலையிலும் அவர்கள் பொருட்களை அள்ளி சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொருவராக தேடித்தேடி கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று வரை 329 பேர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று மேலும் பலர் கைதாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் அடுத்ததாக பொருட்களை சூறையாடி சென்றவர்கள் குறி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த பொருட்களை திரும்பவும் பள்ளிக்கு எடுத்து வந்து ஒப்படைக்க வேண்டும். மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனியாமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in