போதை படுத்தும் பாடு; மதுவில் தண்ணீருக்கு பதில் தின்னர் கலந்து அருந்தியதில், கோயில் பூசாரி பலி!

தண்ணீருக்கு பதில் தின்னர்
தண்ணீருக்கு பதில் தின்னர்

மதுரை அருகே போதை மயக்கத்தில், மதுவில் தண்ணீருக்கு பதில் தின்னரை கலந்து குடித்த கோயில் பூசாரி உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி கோயில் பூசாரி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கிடாரிபட்டியை சேர்ந்தவர் பனையன். இவர் அங்குள்ள பெரியநாச்சியம்மன் கோயில் பூசாரியாக இருந்து வருகிறார். கோயில் கும்பாபிஷேகத்திற்காக வர்ணம் தீட்டும் பணிகள் நடந்து வந்த நிலையில், அப்பணிகளில் பனையனின் உறவினர் வீரணன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் கிடாரிப்பட்டியில் உள்ள மதுபானக் கடையில் வீரணன் வாங்கி வந்த மதுவை பனையன், கருவாமொண்டி, வீரணன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து குடித்துள்ளனர். மது அருந்திய சிறிது நேரத்தில் பூசாரி பனையனும், அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கினர். ஆனால் வீரணனுக்கு எதுவும் ஆகவில்லை.

இதையடுத்து மயங்கியவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டனர். இதில் பூசாரி பனையனின் உடல்நிலை மோசமடைய அவரை மதுரைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பனையன் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று வீரணன் மற்றும் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். முதல் கட்ட தகவலாக, மதுவில் தண்ணீருக்கு பதில், பெயிண்டில் கலக்கும் தின்னரை கலந்து அருந்தியதாக தெரிய வந்துள்ளது. அதனை உறுதிப்படுத்த, மேற்கொண்டு காவல்துறை விசாரணை தொடர்ந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in