ஓடும் பேருந்தில் சில்லறையைச் சிதறவிட்டு, சக பயணி அதை குனிந்து எடுக்கும் இடைவெளியில் ஒன்றரை லட்சத்தை பெண் பயணி திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், ஜெயமங்கலம் காந்திநகரைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம்(42). இவர் உறவினர் வீட்டு விசேசத்திற்கு துத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்திற்கு சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பேருந்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் ஒருவரும் இருந்தார். இருவரும் மூன்றுபேர் இருக்கும் சீட்டில் அருகருகே அமர்ந்து இருந்தனர். பேருந்து அருப்புக்கோட்டை அருகில் வந்தபோது திடீரென கைகுழந்தையுடன் வந்த இளம்பெண் தன் கையில் இருந்த சில்லரைகளைக் கீழே வேண்டுமென்றே தவறவிட்டார்.
குழந்தையை வைத்துக்கொண்டு குனிந்து எடுக்க அந்தப் பெண் சிரமப்படுவதைப் பார்த்த சங்கரலிங்கம் குனிந்து எடுத்துக் கொடுத்தார். தொடர்ந்து வந்த பேருந்து நிறுத்தத்தில் அந்த இளம்பெண், கைக்குழந்தையுடன் அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கிச் சென்றுவிட்டார். சங்கரலிங்கமும் இதுகுறித்துத் தெரியாமலேயே தன் வீட்டுக்குச் சென்றுவிட்டார். வீட்டுக்கு சென்றபோது தான் தன் பாக்கெட்டில் வைத்திருந்த 1,53,000 ரூபாய் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அதன்பின்பு தான் பேருந்தில் இருந்த இளம்பெண் சில்லரையைக் கொட்டி தன்னிடம் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சங்கரலிங்கம் அருப்புக்கோட்டை டவுண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து அந்தப் பெண் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.