
சென்னை மதுரவாயல் பகுதியில் பிரபல சின்னத்திரை ஜோடி வீட்டில் டிவி திருடு போனது. அதேபகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி வீட்டில் காரும் திருடுப் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகர் 15 வது தெரு பகுதியில் அடுத்தடுத்து இரு வீடுகளில் திருட்டு நடைபெற்றது. பிரபல சின்னத்திரை ஜோடி ராஜ்கமல்- லதா ராஜ்கமல் இவர்களுக்கு சொந்தமான சூட்டிங் பங்களா ஒன்று இந்த பகுதியில் உள்ளது. இந்த வீட்டை அவர்கள் சூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வீட்டில் இன்று காலை டிவி உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருப்பதாக வீட்டில் வேலை செய்யும் பெண் தகவல் அளித்துள்ளார். அதன்படி ராஜ்கமல்- லதா ராஜ்கமல் வீட்டிற்கு வந்து பொருட்கள் திருடு போனதைக் கண்டு மதுரவாயல் போலீஸாருக்குப் புகார் அளித்தனர்.
இதன் பேரில் மதுரவாயல் போலீஸாரும் தற்போது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவர்கள் வீட்டில் டிவி உள்ளிட்ட சில பொருள்கள் மாயமாகி இருந்தது.
மேலும் அதே தெருவில் உள்ள பாஜகவின் வெளிநாட்டு வாழ் தமிழர்களின் வளர்ச்சி பிரிவு தலைவர் பொன். பிரபாகர் என்பவரின் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த காரும் திருடப்பட்டுள்ளது இது தொடர்பாகவும் மதுரவாயல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் .ஒரே தெருவில் சினிமா சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் பாஜக பிரமுகரின் வீட்டில் அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் அதிச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது .
அதே போல் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள மற்றொரு சூட்டிங் நடக்கும் வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி, மோட்டார்கள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் மதுரவாயல் பகுதியில் அடுத்தடுத்து சூட்டிங் வீடுகளைக் குறிவைத்து மர்மநபர்கள் திருடிச் செல்வது தொடர்கதையாகி வருகின்றனர். எனவே, போலீஸர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.