பிரதமர் மோடிக்கு இப்போது இந்தியா என்ற பெயரால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றுகிறார். உலகமே அவரைப் பார்த்து சிரிக்கிறது என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
ஜி20 மாநாட்டு அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்குப் பதில், 'பாரத் குடியரசுத் தலைவர்' என அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையாகி இருக்கிறது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பவன் கேரா கூறுகையில், "பிரதமர் மோடிக்கு இப்போது இந்தியா என்ற பெயரால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றுகிறார். உலகமே அவரைப் பார்த்து சிரிக்கிறது. நீங்கள் எங்களை, எங்கள் சித்தாந்தங்களை, எங்கள் தலைவர்களை வெறுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்தியாவையும் இந்தியர்களையும் வெறுக்காதீர்கள்" என்றார்.
இதற்கிடையே நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' என மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.